பெயல்நீர் சாரல்கள்…
இனம் புரியாத படபடப்பு, பல வருடங்கள் பல தருணங்களில் நான் கிறுக்கியதைப் பலர் பாராட்டினாலும், நூலாய் வெளியிட இதுவரை தோன்றவில்லை.
எண்ணித் துணிகக் கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
என்கின்ற வள்ளுவன் வாக்குப்படி, தமிழ்ச்சான்றோர் கூடியிருக்கத் துணிவுத் துணையாக வந்ததால் என் வாழ்கைப் பாதையில் வழிநெடுக நான் வீசியெறிந்தத் தமிழ்க் கிறுக்கல்கள் உங்கள் கைகளிலே இன்று உலா வருகிறது.
நொடிப்பொழுதில் வந்து விழுந்த தமிழ் வார்த்தைகள் எனக்குப் பல சமயம் வியப்பைத் தரும். இந்த அண்டத்தைப் போல் தமிழும் புரியாத புதிர் தான்.
சில சிணுங்கல்கள்,சில ஆசைகள், சில ஆத்திரங்கள் என்று வாழ்கை வாரிக் கொடுத்தவைகளை இங்குக் குவித்திருக்கிறேன். உங்கள் முகவரி நோக்கி என் முதல் பயணம்.





